Wednesday, 15 January 2025

அம்மாவே உயிர்.


புதிய கீதை 7 (சும்மா இல்லை அம்மா)

அம்மா என்றே உயிர் உள்ளே 
ஆன்மா அதிரும் தமிழ் சொல்லே.
சும்மா சொல்லும் சொல்லல்ல 
சொந்தம் எல்லாம் அதனுள்ளே.

அம்மா எல்லாம் தந்தாளே
அவளே கடவுள் அன்பாலே.
சும்மா இல்லை உறவாலே.
சுபமே அவளுக்கு நான்தானே.

அம்மா என்னைக் கண்டாளே,
அன்பில் இன்பம் கொண்டாளே.
சும்மா சூட்டிய  பேரல்ல.
சொப்பனம் வளர்த்தாள் பேராள.

அம்மா மனசே நான்தானே .
அவளுக்குள் இருப்பதும் வேறென்ன?
சும்மா வரவில்லை சுப வாழ்வு.
அம்மா படைத்தாள் நிச வாழ்வு.

அம்மா வாழ்ந்ததும் எனக்காக.
அவளுக்குள் உயிரும் நானாக.
சும்மா அவளும் உண்ணவில்லை.
சொறிந்தால் அதையே பாலாக.

அம்மா சிந்திய வேர்வையிலே
அடியேன் குளித்தேன் அரிவியிலே!
சும்மா என்னை வளர்க்கவில்லை.
சூரிய ஒளியாய் சுடரவிட்டாள்.

அம்மா மகிழ்ந்து வியந்தாளே.
அவளை மிஞ்சநான் உயர்ந்தேனே.
சும்மா இல்லை அவள்காப்பு
உலகம் போற்றச் செய்தாளே.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment