Thursday, 16 January 2025

தரணி வாழ்க!


தரணி என்றும் வாழும்.

தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

பேருக்கு ஒன்று தலைமை
ஊருக்கு ஒன்று நிலைமை
ஆளுக்கு ஒன்று அதிகாரம்
யாருக்கு நின்று செயலாகும்?
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
.
சொந்தம் கூடி கொண்டாடும்
பந்தம் தேடி தந்தாளும்
மந்தை ஒன்று அரசாண்டால்
சந்தை போன்று நாடாகும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

வழக்குகள் எதிர்கொண்டு
இழுக்குகள் புதிர் வென்று
நிலைத் தாள்வார் யார்நின்று.
தலை யொன்று ஆள்வென்று.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

வியாபாரிகள் நாடாண்டார்.
வியாபாரமே பாடென்றார்
வேண்டாதார் காடாண்டார்.
வேண்டியவர் வீடாண்டார்.
உரிமை வாழ்வு பறி போச்சு.
உடமை நோவு நெறி ஆச்சு.
தலைமை எங்கோ அதிகாரம்.
நிலைமை இங்கே பரிதாபம்.

கொ.பெ.பிச்சையா.

Wednesday, 15 January 2025

அம்மாவே உயிர்.


புதிய கீதை 7 (சும்மா இல்லை அம்மா)

அம்மா என்றே உயிர் உள்ளே 
ஆன்மா அதிரும் தமிழ் சொல்லே.
சும்மா சொல்லும் சொல்லல்ல 
சொந்தம் எல்லாம் அதனுள்ளே.

அம்மா எல்லாம் தந்தாளே
அவளே கடவுள் அன்பாலே.
சும்மா இல்லை உறவாலே.
சுபமே அவளுக்கு நான்தானே.

அம்மா என்னைக் கண்டாளே,
அன்பில் இன்பம் கொண்டாளே.
சும்மா சூட்டிய  பேரல்ல.
சொப்பனம் வளர்த்தாள் பேராள.

அம்மா மனசே நான்தானே .
அவளுக்குள் இருப்பதும் வேறென்ன?
சும்மா வரவில்லை சுப வாழ்வு.
அம்மா படைத்தாள் நிச வாழ்வு.

அம்மா வாழ்ந்ததும் எனக்காக.
அவளுக்குள் உயிரும் நானாக.
சும்மா அவளும் உண்ணவில்லை.
சொறிந்தால் அதையே பாலாக.

அம்மா சிந்திய வேர்வையிலே
அடியேன் குளித்தேன் அரிவியிலே!
சும்மா என்னை வளர்க்கவில்லை.
சூரிய ஒளியாய் சுடரவிட்டாள்.

அம்மா மகிழ்ந்து வியந்தாளே.
அவளை மிஞ்சநான் உயர்ந்தேனே.
சும்மா இல்லை அவள்காப்பு
உலகம் போற்றச் செய்தாளே.

கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 14 January 2025

மனிதனும் தெய்வமும்.


புதிய கீதை -5 (மனிதனும் தெய்வமாகலாம்)

எல்லாப் புகழும் எட்டும் அவர்க்கே!
நல்லார் வாழும் சன்மானம் அதற்கே.!
வல்லார் பிறப்போர்
அவதாரம்
சொல்லேர் சிறப்பவர் 
திரு வாசகம்

சாதிக்க முடியா சாதனை எதையும்
சாதிக்குந் துணிவும் இறை அம்சமாகும்.
நீதிக்குள் நின்று நியாயங்கள் செய்தும்
நிந்தனை பொறுப்பதும் தெய்வீக மாகும்.

சுயசுபம் துறப்பதும் புதுயுகம் படைப்பதும்
சுத்த சன்மார்க்க சரணமும் ஆகும்.
பயமது தொலைந்தும் ஜெயம்பெற முயன்றும்
நயம் செயல் முடிப்பதும் அறமாகும்.

தனக்கென எண்ணா தயவுறு உள்ளம்
வணக்கத்திற் குரிய இறை யுறை இல்லம்
மனிதம் சிறந்து புனிதம் நிறைந்தால்
மனிதரும் தெய்வம் என்பதும் பொருந்தும்

துறவிங்கு உலகில் தனியொரு பிறவி
அகிலம் வணங்கும் துணை தவத்துறவி.
மரணம் இல்லா நிரந்தர உறவன்
வரமென என்றும் இதயத்தில் இறைவன்.

வாடிய பயிர் கண்டு வாடிய
மனிதம்.
தேடிய தெய்வீகம் கூடிய
புனிதம்.
கருணை என்பது கடவுளின் அம்சம்.
இறை நிலை அதுதான் நிதர்சனம்.

கொ.பெ.பி அய்யா.