Thursday, 13 February 2025

துளிரும் உதிரும் சருகாகும்.

துளிரும் சருகாகும்.

ஒவ்வொரு துளிரும் பழுத்துச் சருகாகும்.
எவ்வித உடலும் உழுத்துப் பழசாகும்.
நாளும் முதிர்ந்து இளமை சிதைவாகும்.
காலம் நிறைந்து கோலம் உருமாறும்.

ஏளனம் பேசும் முதுமை உனக்கும்,
நாளெண்ணிப் போடும் காலக் கணக்கும்.
எவ்வுயர் பதவி எத்தனை சிறப்பும்
இருந்தென்ன யோகம்! மருந்தென்ன செய்யும்!

இளமைச் செருக்கும் வாலிப முறுக்கும்,
நிலைமை எவர்க்கும் நிலையென இருக்கும்?
ஏளனக் களிப்பும், முதுமை இழிப்பும்,
நாளை உன்னைப் பதிலுக்குப் பழிக்கும்.

இலைகளை உதிர்த்து
மரங்கள் துளிர்க்கும்.
தலைமுடி வெளுத்து
தளர்வினை உரைக்கும்.
ஆண்டொன்று கடந்தால் வயதொன்று கூடும்.
விதியது நிறைந்தால்
வினையது முடிக்கும்.

கொ.பெ.பிச்சையா.













இதுதான் வாழ்க்கை.

பயணம்

தாயிடம் தொடக்கம் தீயிடம் அடக்கம்.
இடையிலே சிறுபயணம் என்பதுதே வாழ்க்கை. 
வாழ்ந்த வரையும்
 கணக்கென்ன இருப்பு.
வரவு வைப்பான் இறைவன் பொறுப்பு.

வரவின் நோக்கம் வைய்யம் தொடர
பிறப்பின் ஆக்கம் உறவுகள் படர
வளர்வின் காலம் வடிவம் கொடுக்கும்.
நிலவும் சமநிலை செலவில் இருக்கும்

படைப்பின் அவசியம் பகவன் இரகசியம்.
விடைப்பயன் விளக்கம் விளங்கா அதிசயம்.
படைப்பதன் துலக்கம் புலப்படும் விதமே
கிடைப்பது சமூகம் நலப்படும் இதமே.

விஞ்ஞானம் மெஞ்ஞானம் படைப்புகள் உலகில்,
அஞ்ஞானம் அகற்றிய ஆர்வலர் கொடைகள்,
எஞ்ஞான்றும் பயக்கும் இயன்முறை நயன்கள்,
துஞ்சாது நிலைத்துப் படைப்பாளர் வாழ்வர்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 10 February 2025

தர்மத்தை வாழ விடு.


தீபாவளி—தீ பாவமழி!

தீபங்கள் ஒளியங்கு தெரியட்டுமே!
தீ பாவம் அழியென்று எரியட்டுமே!
தீ பாவளி சுடரெங்கும் விரியட்டுமே!
தீ பாவம் ஒளி மங்கி ஒழியட்டுமே!?

தர்மங்கள் பிழைத்திங்கு வாழட்டுமே
கர்மங்கள் தழைத்திங்கு ஆளட்டுமே!
வர்மங்கள் கலைந்திங்கு ஓயட்டுமே!
துர்மங்கள் தொலைந்திங்கு மாயட்டுமே!

இனம்சேரா நாய்க்குணம் தீரட்டுமே!
குணம்மாறா மனிதமனம் சேரட்டுமே!
பணம்காக்கும் பேய்க்குணம் மடியட்டுமே!
மனம்பூக்கும் புனிதினம் விடியட்டுமே!

மனிதராய் வாழும் நலம்  பழகட்டுமே!
மனம் பயின்று தேறிபயம் விலகட்டுமே!
வன விலங்காய் தேடும் பகை ஒழியட்டுமே!
இன வொழுங்காய் கூடும் தகை நிலவட்டுமே!

நீதி யென்ன மன்ற மென்ன புரியட்டுமே!
மீதி யென்ன மேன்மை யென்ன அறியட்டுமே!
சாதியென்ன ஆதியென்ன தெளியட்டுமே!
வாதி யென்ன வழக்கு மென்ன ஒழியட்டுமே!

கத்தி யென்ன புத்தி யென்ன தீட்டட்டுமே!
உத்தி யென்ன உண்மை யென்ன மீட்டட்டுமே!
வெற்றி யென்ன தோல்வி யென்ன விளங்கட்டுமே!
முற்றி யென்ன மீட்சியென்ன காட்டட்டுமே!

அறி வென்ன ஆக்க மென்ன விளங்கட்டுமே!
நெறி யென்ன நே ரென்ன துலங்கட்டுமே!
அன் பென்ன பண் பென்ன உணரட்டுமே!
ஆசை யென்ன பாசமென்ன மலரேட்டுமே! 

கோப மென்ன தாப மென்ன வெடிக்கட்டுமே! 
பாவ மென்ன யோக மென்ன படிக்கட்டுமே!
தாக மென்ன மோக மென்ன தேறட்டுமே!
தேக மென்ன  தியாக மென்ன மீறட்டுமே!

ஆசை யென்ன மோச மென்ன தெளியட்டுமே!
நிச மென்ன நாச மென்ன அறியட்டு மே!
வாச மென்ன வாழ் வென்ன நினைக் கட்டுமே!
நேச மென்ன நிலையென்ன முனையட்டுமே!

நாளென்ன விழாவென்ன ஆயட்டுமே!
நமக்கென்ன நலமென்ன தேடட்டுமே!
பாடமென்ன தேடலென்ன படிக்கட்டுமே!
படிப்பென்ன புரிவென்ன துலங்கட்டுமே!

பாசமென்ன நேசமென்ன மலரட்டுமே!
பண்பென்ன அன்பென்ன வளரட்டுமே!
ஈகைஎன்ன இரக்கமென்ன புலரட்டுமே!
இயல்பென்ன தயவென்ன ஒளிரட்டுமே

கொ.பெ.பி.அய்யா.

உணர்ந்து வாழ்க!

வாழ்க சிறந்து.

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் மறந்து.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்து--நெஞ்சம்
அமைதி நிறைந்து வாழ்க மகிழ்ந்து.

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்து
நம்பிக்கைத் தன்னில் நாளும் வாழ்ந்து--தன்னிலை
நன்னிலை நின்று வாழ்கச் சிறந்து.

அச்சம் அற்ற நம்பிக்கைக் கொண்டு
உச்சம் காண உன்னில் துணிந்து.
துச்சம் என்றே தூரம் மறந்து--மீதம்
மிச்சம் வாழ வாழ்க முயன்று.

தன்னைத் தாழ்த்தும் தாழ்மை அகற்று.
உன்னை ஏற்றும் உள்ளறி வேற்று.
பின்னை பயத்தின் பேதமை விடுத்து--உன்னை
முன்னை முயன்று வாழ்க அடுத்து.

உருவாக்குத் தெம்பு உன்னை நம்பி
புரட்டலாம் நெம்பு பூமியைத் தம்பி.
அடுத்தவர் உதவிக் கிடைப்பதை நம்பி--வீணே
கெடுவதை உதறி வாழ்கத் தம்பி.

வண்ணத்துப் பூச்சி திண்ணத்தைப் பாரு.
தன்னைத் தூக்க தான்செய்யும் போரு.
எண்ணத்தின் வலிமை கிழிபடும் கூடு--அது போல்
மண்ணில் பரந்து வாழ்க நீடு.

பொன்னிகர் மாட்சி தன்னுயர் காட்சி.
உன்னறித் தேடல் உள்ளறி நீட்சி.
மண்ணுயர் மாந்தர் அன்னவர் சாட்சி--மண்ணில்
மங்கலம் பொங்க வாழ்க நீயே.

கொ.பெ.பி.அய்யா.


உறவின் வேர்.

உறவின் வேர்.

ஊரு என்று சொன்னால் மட்டும் போதாது.
உறவின் வேரு என்றாலும் தீராது.
சொந்தம் பந்தம் சேர்ந்து வாழும் பூமி இது.
எந்த ஊரு வாழ்ந்தாலும் சாமி இது.

ஆலமரம் நிழல் போல எங்கள் கூட்டம்,
வாழும் ஒரு வட்டம் எங்கள் பூந் தோட்டம்.
தனிமரம் போல் ஒற்றையாக வாழ மாட்டோம்.
புனிதம் எங்கள் உறவில் நாங்கள் கலையவும் மாடோம்.

கோவில் இல்லா ஊருங்கூட இருந்தும் இருக்கும்.
குல சாமி இல்லா சொந்தம்  மறந்தும் இருக்கும்.
வாழ்வில் ஒரு வரம் பெற்றால் என்ன இருக்கும்!
சாவில் அதை வந்து பாரு புரிந்தும் இருக்கும்.

உலகுக் கெல்லாம் சோறு போடும் உழவுத் தொழிலால்,
வழங்கி வாழும் வள்ளல் நாங்கள் உள்ளம் எழிலால்.
மரபு வழி ஒழுக்கம் அதில் மாறவும் இல்லை.
உறவின் வேரு ஊரு இதை 
மீறவும் இல்லை.

கொ.பெ.பிச்சையா.






Sunday, 9 February 2025

அற்பம் BUTஅற்புதம் வாழ்க்கை

அற்பம் but அற்புதம்.

அற்பம் ஆனாலும் அற்புதம்.
சொற்பம் ஆனாலும் சொற்கம்.
வாழும் வரைதான் வாழ்க்கை.
வாழ்க அதுவரை இயற்கை!

இயற்கை படைத்த படைப்பு.
இரகசியம் அதற்குள் அடைப்பு.
வந்த வழிதான் தெரிரியும்.
போவது எவற்குப் புரியும்?

வந்த நேரத்தின் குறிப்பு,
வருடம் வயதின் அமைப்பு.
எந்த நேரத்தில் மரிப்பு,!
என்பது இரகசியம் மறைப்பு.

வருவதை முன்னமே எவரறிந்தார்?
இருப்பதும் இன்னுமே எவர் கணித்தார்?
வருவதும் போவதும் யாரறிவார்?
வாழ்ந்தால்  சொல்லும் வரலாறு.

காலம் படைக்கும் வரலாறு.
நாளும் பதிக்கும் உன் பேரு.
வாழுங் காலம் கொஞ்சம் தான்,
யாருக்கும் நம்மால் வஞ்சம் ஏன்?

வாழவைத்து வாழ்வதாம்,
வாழ்க்கையது இயற்கையாம்.
எடுத்து வாழாமல் கொடுத்து வாழ்க!
அடுத்த பிறவியும் அதுவாக வாழ்கவே!

கொ.பெ.பிச்சையா.






Wednesday, 5 February 2025

பயம் பாவம்.


புதிய கீதை 6 (பயம் பாவம்)

பயமென்பது தன்வயம் அற்றலையும்  மனமே!
நயமெது என்றாய நின்றுதவாக் குணமே!
முயன்றுந் தெளிய முயலாத் துணிவே!
இயன்றதன் நம்பிக்கை இல்லாத்தனமே!

வாஞ்சையில் விஞ்சியும், வாக்கினால் பொய்க்கவும்,
தீய்ந்ததீ போன்றும்நீ ! ஓய்ந்தும்ஏன் நீருவதோ?
ஊஞ்சலாய் உள்மனம் ஒன்றினில் நில்லாதும்
ஆய்ந்த பயத்தினால் அல்லலும் கொள்ளுவதோ!

தர்மத்தில் தப்பான் தனதுற வாகினும்
கர்மத்தின் பாவம் கட்டுண்ட பயம்தான்.
அதர்மம் பழகுவதும் அவர்பின் தொடர்வதுவும்,
விதம்படும் பாவத்தின் விலை யென்ன நேருமோ!

பொய்யும் புரட்டும் பொல்லாத ஊழலும்
செய்யும் அரசியல் சீர்கெடும் ஆளலும்,
கைகள் மடக்கும் மெய்யும் முடக்கும்.
செய்வினைப் பாவம் தீவினைப் பிடிக்கும்.

தீவினை கண்டும் திடமிலா மனமே!
நேர்வினை ஒஞ்சும் நெறியிலாக் குணமே!
ஊழ்வினை என்ன உன்னையும் விடுமோ!
ஆள்வினை அஞ்சும் அறிவிலாப் பயமோ!

அடிமை பழகிநீ அஞ்சியே வாழ்ந்தாய்].
மடமை மூழ்கிநீ கெஞ்சியே தாழ்ந்தாய்
அதிகாரம் படிந்துநீ ஆளுமை இழந்தாய்
உரிமை மறந்துநீ நிழலாய் அலைந்தாய்.

பயந்து பணிந்தினி பாழ்பட வேண்டாம்
தயங்கித் துணிவினில் தாழ்வுற வேண்டாம்.
இறப்ப தொருநாள் உறுதி என்றோ ஆகட்டும்.
பிறப்ப தினியில்லை பேய்களை ஓட்டுவோம்.

கொ.பெ.பி.அய்யா.