Monday, 3 February 2025

ஆடும் பம்பரம்.


ஆடும் பம்பரம்.

படைப்பெல்லாம் பம்பரமே பகவானால் ஆடிடுமே!
ஆட்டுவிப்போன் சுழட்டாமல்  ஆடாது பம்பரமே!
எந்நாளோ அந்நாளே எவறிவார் இரகசியமே!
சொன்னாலோ என்னாகும் அவனறிவான் அவசியமே!

சுழற்றி விட்டால் பூமியில் சுழன்றாடும் பம்பரம்!
தட்டி விட்டால் தரையிலே தள்ளாடும் பம்பரம்.
பற்ற வொரு இடமுண்டு 
பரமனவன் அடியுண்டு.
பற்றுகப் பற்றினை உற்றவன் நிழல் ஒன்றினை.

ஆட்டி விட்ட ஆண்டவன் அவனே ஆட்டுவான்.
ஆடும் போது மாற்று விசை அவனே மாற்றுவான்.
ஆடும் விதம் அவன் விதம் அவனே ஆக்குவான்.
ஆசை மனம் அடங்கிட அவனடி 
தேக்கு வான்.

ஆடும் வரை ஆடும் முறை ஞான மென்கிறார்.
தேடும் வழி கூடுமிடம் மோன மென்கிறார்.
நிறை விடம் அவனிழல் நித்திரை என்கிறார்.
 இறை யடி நம்பிக்கை வாழ்வியல் என்கிறார்.

மூடமெனும் சுயநல மெல்லாம் முடிந்து சாகட்டும்.
வேடமெனும் வாழ்வு எல்லாம் கலைந்து ஆகட்டும்.
பாடமெனப் பழகியதெல்லாம்
ஆடி அடங்கட்டும்.
பாவமென அறிந்த தெல்லாம் அருகி ஒழியட்டும்.

பழியென நெஞ்சறிந்தால் பழகத் துணியாது.
பக்தியெனப் பயமிருந்தால்
பாவம் செய்யாது.
நோக்க மென ஒன்றிருந்தால்
மார்க்கம் மாறாது.
மார்க்க மென மனதிருந்தால்
மயங்கித் தப்பாது.

ஒழுங்கு சட்டம் திட்டங்காக்கப் புறக்காவலே!
ஒழுக்கம் விளக்கம் தீர்வாற்ற அகக்காவலே!
பகுத்தறிந்தால் அகக்காவல் பக்தி ஒழுக்கமே!
பக்தி விட்டே ஒழுக்கம் கெட்டுப் பண்புங் கெட்டதே!

இயற்கைதான் மூலமென போற்றி வாழுவோம்.
செயற்கையின் சேதம்தனை மாற்றித் தேறுவோம்..
இயற்கைதான் இறையெனவும் மார்க்கம் பழகுவோம்.
செயற்கையை வரமெனவும் ஏற்று வணங்குவோம்.

பகுத்தறிந்து பக்தி கொண்டு 
ஞானம் பெறுவோம்.
தொகுத்தறிந்து புதுமைகள் கண்டு புகுத்துவோம்.
வகுத்து வைத்த பழமைகளை பாதுகாப்போம்.
நிறுத்தி நல்ல வழமைகளை 
நெறியென வாழுவோம்.

எதுஅறிவு எதுதெளிவு என்றே தேடுவோம்.
எதுபுரிதல் எதுதெரிதல் நன்றே நாடுவோம்..
மலர்ச்சி யென்றும் ஒன்றில் ஒன்றே கூடாமல்,
மாறும் முயற்சி வளர்ச்சி யென்றே மயங்காமல்
விளங்கி நன்றும் ஒன்றாம் 
தேர்ந்தே வாழுவோம்.

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment