Thursday, 13 February 2025

துளிரும் உதிரும் சருகாகும்.

துளிரும் சருகாகும்.

ஒவ்வொரு துளிரும் பழுத்துச் சருகாகும்.
எவ்வித உடலும் உழுத்துப் பழசாகும்.
நாளும் முதிர்ந்து இளமை சிதைவாகும்.
காலம் நிறைந்து கோலம் உருமாறும்.

ஏளனம் பேசும் முதுமை உனக்கும்,
நாளெண்ணிப் போடும் காலக் கணக்கும்.
எவ்வுயர் பதவி எத்தனை சிறப்பும்
இருந்தென்ன யோகம்! மருந்தென்ன செய்யும்!

இளமைச் செருக்கும் வாலிப முறுக்கும்,
நிலைமை எவர்க்கும் நிலையென இருக்கும்?
ஏளனக் களிப்பும், முதுமை இழிப்பும்,
நாளை உன்னைப் பதிலுக்குப் பழிக்கும்.

இலைகளை உதிர்த்து
மரங்கள் துளிர்க்கும்.
தலைமுடி வெளுத்து
தளர்வினை உரைக்கும்.
ஆண்டொன்று கடந்தால் வயதொன்று கூடும்.
விதியது நிறைந்தால்
வினையது முடிக்கும்.

கொ.பெ.பிச்சையா.













No comments:

Post a Comment