Wednesday, 5 February 2025

பயம் பாவம்.


புதிய கீதை 6 (பயம் பாவம்)

பயமென்பது தன்வயம் அற்றலையும்  மனமே!
நயமெது என்றாய நின்றுதவாக் குணமே!
முயன்றுந் தெளிய முயலாத் துணிவே!
இயன்றதன் நம்பிக்கை இல்லாத்தனமே!

வாஞ்சையில் விஞ்சியும், வாக்கினால் பொய்க்கவும்,
தீய்ந்ததீ போன்றும்நீ ! ஓய்ந்தும்ஏன் நீருவதோ?
ஊஞ்சலாய் உள்மனம் ஒன்றினில் நில்லாதும்
ஆய்ந்த பயத்தினால் அல்லலும் கொள்ளுவதோ!

தர்மத்தில் தப்பான் தனதுற வாகினும்
கர்மத்தின் பாவம் கட்டுண்ட பயம்தான்.
அதர்மம் பழகுவதும் அவர்பின் தொடர்வதுவும்,
விதம்படும் பாவத்தின் விலை யென்ன நேருமோ!

பொய்யும் புரட்டும் பொல்லாத ஊழலும்
செய்யும் அரசியல் சீர்கெடும் ஆளலும்,
கைகள் மடக்கும் மெய்யும் முடக்கும்.
செய்வினைப் பாவம் தீவினைப் பிடிக்கும்.

தீவினை கண்டும் திடமிலா மனமே!
நேர்வினை ஒஞ்சும் நெறியிலாக் குணமே!
ஊழ்வினை என்ன உன்னையும் விடுமோ!
ஆள்வினை அஞ்சும் அறிவிலாப் பயமோ!

அடிமை பழகிநீ அஞ்சியே வாழ்ந்தாய்].
மடமை மூழ்கிநீ கெஞ்சியே தாழ்ந்தாய்
அதிகாரம் படிந்துநீ ஆளுமை இழந்தாய்
உரிமை மறந்துநீ நிழலாய் அலைந்தாய்.

பயந்து பணிந்தினி பாழ்பட வேண்டாம்
தயங்கித் துணிவினில் தாழ்வுற வேண்டாம்.
இறப்ப தொருநாள் உறுதி என்றோ ஆகட்டும்.
பிறப்ப தினியில்லை பேய்களை ஓட்டுவோம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment