புதிய கீதை (2) கோழையாய் வாழாதே
ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக மாளாதே!
ஏழையாகி மாண்டாலும் கோழையாகி வாழாதே!
கோழையாக வாழ்ந்தாலும்
குற்றந் துணை போகாதே!
ஏழையாக வாழ்வதும் இயல்பிலே இன்பமே!
கோழையாக வாழ்வதோ! கொடுமையாம் துன்பமே!
ஏழை யவன் மனதென்றும்
இலலாமை ஏங்காது.
இவ்வளவே வாழ்க்கையென
அவ்வளவே ஆறி வாழும்.
கொலையும் கொள்ளையும் கோழையின் மனக்கணக்கு.
எதிர்கொள்ளும் வலிமையும் எட்டாதான் குணப் பிணக்கு!
அஞ்சுவது அஞ்சாமைக் கேடித்தனம்.
அஞ்சியஞ்சி வாழ்வதும் பேடித்தனம்.
பதுக்கும் விலையேற்றம் பாவியர் கோழைத்தனம்!
பாவம் அறியாதான்
யாவும் தெரியாத்தனம்
கள்ளமாய் ஓட்டுறுதி,
கையூட்டுப் பொய்யுறுதி,
செல்லாத வாக்குறுதி,
சொல்லாத ஏய்ப்புறுதி,.
அலங்காரப் பேச்சுறுதி,
வாணிப நோக்குறுதி,
ஏழைக் குதவா விதியுறுதி,
கோழைத் தனம் அரசுறுதி.
காதல் மொழிந்து கனிய விழைந்தும்.
ஈதல் இணைந்து இனியக் கலந்தும்.
பேதம் மறந்த பிழையாக் கற்பும்
சாதா வாழ்வும் முயலாது கோழை.
வன்மை யதுவும் வீரமும் அல்லவாம்.
நன்மை யதனால் நேர்வதும் அல்லவாம்.
சிறுமைச் செயலால் எதுபெற் றாலுமே
கொடுமை அதுவொரு கோழைமை யாகுமே!.
கோழைமை அதன்வழி ஆவது அதர்மம்.
வாழும் தகுதி ஆவது தர்மம்.
கோழை ஊளை கேளாது தாண்டும்,
நாளை உலகம் நலம்பெற வேண்டும்.
கொ.பெ.பிச்சையா.


No comments:
Post a Comment